Headline

கொலைக் குழுக்களே படுகொலைக்கும் காணமல்போதல்களுக்கும் காரணம்


என்னதான் மறுக்கின்றபோதும் சிறிலங்காப் படையினரும் அரசைச் சேர்ந்தவர்களும் முழுத் தமிழர்களையும் எதிரிகளாகவே பார்க்கின்றனர் என்று சரத் குமார என்கிற சிங்கள ஊடகவியலாளர் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
உலக பொதுவுடமைவாதிகள் இணையத்தளத்தில் இலங்கையின் இன்றைய கள நிலவரம் குறித்து எழுதியுள்ள கட்டுரையின் விபரம் வருமாறு:

உள்நாட்டில் கடும் எதிர்ப்பு - குறிப்பாக தமிழர்களிடம் இருந்து எதிர்ப்புத் - தெரிவிக்கப்படுகின்றபோதும் இறுதிக்கட்டப் போரின்போது சிறைப்பிடிக்கப்பட்ட 3 லட்சம் தமிழ் மக்களையும் அரசு தொடர்ந்து முகாம்களில் தடுத்து வைத்திருக்கப்போகிறது.

அந்த மக்களை விடுவிக்குமாறு அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் முன்வைத்த கோரிக்கையை, சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச புறந்தள்ளி விட்டார்.

ஐக்கிய நாடுகள் சபையின் ஜூலை மாதம் 17 ஆம் நாள் அறிக்கைப்படி, வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை ஆகிய நான்கு மாவட்டங்களில் அரச படையினரின் பாதுகாப்பில் உள்ள 30 முகாம்களில் 2 லட்சத்து 81 ஆயிரத்து 621 பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் வவுனியாவுக்கு அருகில் உள்ள மெனிக் பாம் முகாமில் உள்ளனர்.

முகாம்களில் உள்ள தமிழ்மக்களை 3 வருடங்களுக்குத் தடுத்து வைக்க அரச படையினர் திட்டமிட்டிருந்தது. இருந்தாலும், அனைத்துலக விமர்சனங்களையடுத்து தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் அனைவரும் இந்த வருட இறுதிக்குள் மீளக்குடியமர்த்தப்படுவர் என்று அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உறுதியளித்தார்.

இப்போது அந்த வாக்குறுதி மெல்லச் சரிகிறது. மீள்குடியமர்வைத் தாமதப்படுத்துவதற்கு புதிய காரணங்களை அரசு கண்டுபிடிக்கிறது. கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டி உள்ளன என்றும் கடைசி விடுதலைப் புலிச் சந்தேகநபர் கூட முகாம்களில் இருந்து அகற்றப்பட வேண்டியவராக உள்ளார் என்றும் அது கூறுகிறது.

ஜூலை மாதம் 30 ஆம் நாள் கொழும்பில் ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசிய, தடுப்பு முகாம்களின் புதிய பொறுப்பதிகாரியான மேஜர் ஜெனரல் தயா ரத்னாயக்க, முகாம்களில் இன்னும் பல ஆயிரக்கணக்கான விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் உள்ளனர் என்றார்.

முகாம்களில் படையினர் சல்லடை போட்டு நடத்திவரும் சோதனைகள் முடிவடையும்போது, புலிகளின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 796 இல் இருந்து 20 ஆயிரம் வரைக்கும் உயரும் என்றும் அவர் கூறினார்.

புலிகளின் புதுப்பிக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அச்சத்தை அதிகரிப்பதற்காக, தற்கொலைப் படையினராகப் பயிற்சி அளிக்கப்பட்ட புலி உறுப்பினர்களும் முகாம்களில் இருக்கின்றனர் என்று ரட்னாயக்க தெரிவித்தார்.

பாதுகாப்புச் செயலாளரும் அரச தலைவரின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ச கடந்த வார இறுதியில் 'சண்டே ஐலண்ட்' வார ஏட்டுக்கு வழங்கிய நேர்காணலில் இதேபோன்ற கருத்தைத் தெரிவித்திருந்தார்.

நன்கு பயிற்சி பெற்ற புலி உறுப்பினர்களை முகாம்களில் இருந்து மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் அந்த நேர்காணலில் கூறினார். அத்துடன், இந்த நடவடிக்கை விடுதலைப் புலிகள் தமது இயக்கத்தை மீளக்கட்டியெழுப்ப எடுக்கும் முயற்சியின் ஒரு பகுதி என எந்தவிதமான சான்று ஆதாரங்களையும் வழங்காமலேயே அவர் மேலும் குறிப்பிட்டார்.

முகாம்களில் இருக்கும் விடுதலைப் புலிகளை அடையாளம் காண்பதற்கு முன்பாகவே அவர்களை விடுவிக்க வேண்டும் என்று விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன என்று அவர் குற்றம் சாட்டினார்.

கோத்தபாயவின் இந்தக் கருத்தானது, அரசின் ஜனநாயக விரோதச் செயல்களை எதிர்க்கும் எவரையும் "விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிக்கிறார்கள்" என்று முத்திரை குத்தும் நோக்கத்தைக் கொண்டது.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் முன்னர் இருந்த பகுதிகளில் அரச படையினர் தமது ஆக்கிரமிப்பை உறுதிப்படுத்தும் வரையில் தமிழ் மக்களை முகாம்களில் வைத்திருப்பதே அரசின் உண்மையான நோக்கம் தவிர அவர்களுக்கு உதவிகளை வழங்குவதற்காக அல்ல என்பதை கோத்தபாயவின் கருத்து வலியுறுத்துகின்றது.

என்னதான் அவர்கள் மறுக்கின்றபோதும் படையினரும் அரசைச் சேர்ந்தவர்களும் முழுத் தமிழர்களையும் எதிரிகளாகவே பார்க்கின்றனர்.

விடுதலைப் புலிகளிடம் இருந்து தமிழ் மக்களைத் தாம் விடுவித்துவிட்டதாகக் கூறும் அரசின் கருத்தை கேலிக்கு உள்ளாக்குகிறது, தமிழ் மக்களை முகாம்களில் அடைத்து வைத்திருக்கும் செயல். இந்த முகாம்களுக்குள் அரச படையினர் துன்புறுத்தல் மற்றும் மிரடல் உள்ளிட்ட தமது கொடுங்கோல் ஆட்சியை நிலைநாட்டியுள்ளனர்.

முகாம்களில் இளைஞர்கள் ஒவ்வொரு நாளும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவதுடன், அவர்களின் உறவினர்களுக்குக்கூட தகவல் சொல்லப்படாமல் எங்கோ இழுத்துச் செல்லப்படுகிறார்கள்.

விடுதலைப் புலி உறுப்பினர்கள் எனக் கூறப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் எந்தவிதமான குற்றச்சாட்டுக்களோ சட்டப்பூர்வமான பிரதிநிதித்துவமோ இன்றி அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

கோத்தபாயவின் நேர்காணலில், கடந்த இரு மாதங்களில் முகாம்களைவிட்டு பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தப்பிச் சென்றுவிட்டனர் என்று தெரிவித்திருப்பதுதான் மிகக் கொடுமையானது. தடுப்பு முகாம்கள் முட்கம்பிகளால் சுற்றி அடைக்கப்பட்டுள்ளதுடன் படையினரின் கடுமையான காவலும் இருக்கிறது.

மக்கள் 'தப்பிச் சென்றார்கள்' என்பதைவிட அவர்களில் பெரும்பாலனவர்கள் 'காணாமல்' போகச் செய்யப்பட்டார்கள் என்பது போன்றே தெரிகிறது. கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக, படையினரின் ஆசீர்வாதத்துடன் இயங்கும் அரச ஆதரவு கொலைக் குழுக்களே ஆயிரக்கணக்கான படுகொலைகளுக்கும் காணமல்போதல்களுக்கும் காரணம்.

முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 2 லட்சத்து 80 ஆயிரம் தமிழ் மக்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று, அமெரிக்காவைத் தளமாகக்கொண்டு இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஜூலை 28 ஆம் நாள் சிறிலங்கா அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

"போருக்கு மத்தியில் அகப்பட்டுக்கொண்ட லட்சக்கணக்கான மக்கள் இவ்வாறு முகாம்களில் முடக்கப்பட்டிருப்பது கொடுமையானது. அவர்கள் இதுவரை பட்டதெல்லாம் போதாதா? நாட்டின் ஏனைய பகுதிகளில் வசிப்பவர்களைப் போன்றே அவர்களுக்கும் தமது சுதந்திரத்தை அனுபவிப்பதற்கான உரிமை இருக்கிறது" என்று அந்த அமைப்பின் ஆசியப் பிராந்திய இயக்குநர் பிறட் அடம்ஸ் தெரிவித்திருந்தார்.

"போர் காரணமாகத் தமது சொந்த இடங்களை விட்டு வெளியேறிய அநேகமாக அனைவரும் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அங்கிருந்து ஒரு சிறு தொகையினர் மட்டுமே, குறிப்பாக மூத்தவர்கள் மட்டுமே வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர். முகாம்களில் உள்ளவர்கள் மருத்துவத் தேவைக்காக மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். அதன் பின்னர் மருத்துவமனை செல்லவேண்டி இருந்தால் படையினரின் பாதுகாப்புடனேயே செல்ல முடியும்." என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுக் கூறப்பட்டுள்ளது.

கடுமையான விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து, எந்த ஊடகமும் தடுப்பு முகாம்களுக்குச் செல்வதை ராஜபக்ச அரசு தடுத்துள்ளது. மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கைப்படி, முகாம்களில் பணியாற்றும் மனிதாபிமானப் பணியாளர்கள் - அரசின் கவனத்திற்கு வராமல் முகாம்களின் நிலை பற்றிய எந்தவொரு தகவலையும் வெளியிடக்கூடாது என - நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். அதனை நிராகரிப்பவர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்படுகிறார்கள். அல்லது அவர்களின் கடவுச்சீட்டு அனுமதி நீடிக்கப்படுவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி
- புதினம்

0 comments: