Headline

நம்பிக்கை துரோகம் -சூழ்ச்சியால் புதைக்கப்பட்ட உண்மைகள்


இந்த இரத்த ஆற்றை நாம் தடுத்திருக்க முடியாதா?

பதில் ஆம் என்பது தான். ஆனால் இந்தப் போரினால் அவர்களுக்குப் பல நன்மைகள் கிடைத்துள்ளன. அதனால் இந்தப் போரை நிறுத்துவதில்லை என்று அவர்கள் தீர்மானித்தார்கள். அதேவேளை பல்லாயிரக்கணக்கான பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்பட்ட போதிலும் அதனை அதன் முடிவு வரை அனுமதிப்பது என்றும் அவர்கள் முடிவெடுத்தார்கள். இந்தியா சீனா பாகிஸ்தான் போன்ற நாடுகள் பாரம்பரியமாகவே நல்லுறவைக் கொண்டிருக்காத போதிலும் ஆச்சரியப்படத்தக்க வகையிலே நண்பர்களானர்கள். தமக்கான பங்கிறைச்சித்துண்டை கொத்திக் கொண்டு போகக் காத்திருக்கும் கழுகுகள் போல தமக்கிடையேயான உடன்பாட்டோடும் ஒரு மூர்க்கத்தனத்தோடும் காத்திருந்தார்கள்.

என்ன நடந்து கொண்டிருந்தது என்று எல்லோருக்கும் தெரியும். இழப்புக்கள் தொடர்பான புள்ளிவிபரங்களை உலகத் தலைவர்கள் கிரிக்கெட் வர்ணனை கேட்பது போல மெதுவாகக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். பழக்கப்பட்ட காரணத்தால் சிலர் இங்கும் அங்குமாக சில அறிக்கைகளை விட்டுக் கொண்டிருந்தார்கள்.

படுகொலைகளை நிறுத்துங்கள் என்று எவரும் உரக்கக் குரல் கொடுக்கவில்லை. அவர்களிடம் அதிகாரம் இருந்தது. ஆனால் அவர்கள் அதனைச் செய்யவில்லை.

அங்கு இடம்பெற்ற படுகொலைகளின் எண்ணிக்கையைக் கொண்டு கிரிக்கெட் ஓட்டங்களை அதன் அறிவிப்புப் பலகையில் புதுப்பிப்பது போன்று ஐநா புதுப்பித்துக் கொண்டிருந்தது. அந்த எண்ணிக்கை ஆயிரக்கணக்கைத் தாண்டிய போதும் ஐநா மௌனமாகவே இருந்தது. அவர்கள் வாயைத் திறந்து இதனைப் பற்றி எதுவும் பேசவில்லை.

ஐநாவின் சற்றலைட்டுக்கள் படங்களை எடுத்துக் கொண்டே இருந்தன. ஆனால் அந்த இரத்த ஆற்றைத் தடுத்து நிறுத்த அவை எந்தப் பிரயத்தனத்தையும் எடுக்கவில்லை. தேசங்களின் இதயங்கள் எல்லாம் கல்லாகி, உதவியேதுமின்றி சிதைந்தழிந்தன. அந்தப் பேராசைத்தனம் திருப்தி செய்யப்பட்டது.

மனித உரிமைக்காப்பாளர்களும், பெரும் ஊதியத்துடன் நியமிக்கப்பட்ட ராஜதந்திரிகளும் தங்களது காலையுணவை உண்ணுகையில் இலங்கையின் பயங்கரத்தைப் பற்றிக் கேள்வியுற்றார்கள். அவர்களுக்கு இந்தக் கதைகள் பெரும் சலிப்பூட்டுவனவாக இருந்தன. மனித உரிமை ஆய்வாளர்களும் நிபுணத்துவம் மிக்கவர்களும் அந்த உயிர்களைப் பாதுகாப்பதற்கு ஏதாவது செய்வதற்குப் பதிலாக இது தொடர்பான தங்களது ஆய்வுக்கட்டுரையை வெளியிடுவதில் கண்ணும் கருத்துமாக இருந்தார்கள். மேற்கு நாடுகள் பல தமது குரல்களை உயர்த்தினாலும் அவர்களுடைய அறிக்கைகள் இந்த அழிவுப் போக்குடைய நிகழ்ச்சித்திட்டத்தைக் கட்டுப்படுத்துமளவுக்குப் பலமானவையாக இருக்கவில்லை.

வன்னியில் இறந்து கொண்டிருந்தவர்களின் உறவினர்கள் உலகின் பிரதான தலைநகரங்களின் தெருக்களில் இறங்கினார்கள். அவர்கள் முழந்தாளில் நின்று இந்த மன்னர்களிடமும் மகாராணிகளிடமும் அழுதார்கள். அவர்கள் தங்களுடைய எதிர்ப்பைப் பல்வேறு வழிகளில் காட்டினார்கள். அவர்களது அழுகையை நாங்கள் கேட்கவில்லை. ஆனால் அவர்களை எம்மைத் தொந்தரவு செய்பவர்களாகவே நாம் பார்த்தோம். ஏனென்றால் அவர்கள் எங்களது தெருக்களைத் தடை செய்தார்கள். நாங்கள் அவர்களது அழுகையைக் காது கொடுத்துக் கேட்டிருந்தால் ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியிருக்க முடியும்.

எங்களுடைய வானொலிகள் அவர்கள் ஏன் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் என்பதைப் பற்றிப் பேசவில்லை. ஆனால் அவர்களை எவ்வாறு அந்த வீதிகளிலிருந்து அப்புறப்படுத்துவது என்று பேசின. நாங்கள் இப்போது சந்தோசமாக இருக்கிறோம். ஏனென்றால் அங்கு எந்தத் தமிழ் ஆர்ப்பாட்டக்காரர்களும் இல்லை. பாதுகாக்க முற்பட்ட பொதுமக்களும் இறந்து பட்டு விட்டார்கள்.

இது மிகத் தெளிவானது. இந்தப் போர் பலநாடுகளின் பெரும் துணையுடன் நடத்தப்பட்டிருக்கிறது. அவர்களால் இந்த இரத்த ஆற்றைத் தடுத்துநிறுத்தும் வகையில் இலங்கை அரசை இணங்கச் செய்திருக்க முடியும். குறிப்பாக கிளர்ச்சியாளர்கள் தாங்கள் சரணடைவதாக அறிவித்த பின்னராவது.

இந்த இரத்த ஆற்றைத் தடுத்து நிறுத்தியிருக்க முடியும.; ஆனால் எவருக்கும் அதில் அக்கறை இருக்கவில்லை. ஏனென்றால் எல்லோரும் தத்தமது திட்டத்துடனேயே அங்கு சென்றிருந்தார்கள். அது முடிவுக்கு வர முன்னரே இந்தப் போரின் பங்குதாரர்கள் தமது அறுவடையைச் செய்ய ஆரம்பித்தார்கள்.

யார் இந்தப் போரால் நன்மையடைந்தார்கள்?

இந்தப்பிராந்தியத்தில் தங்களுடைய நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என நினைக்கிற இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளின் கைப்பாவையாக இலங்கை அரசாங்கம் பயன்படுத்தப்பட்டது. இலங்கையிலிருந்து மெதுவாகத் துடைத்தழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அப்பாவித் தமிழ்மக்கள் தவிர மற்றைய ஒவ்வொருவரும் இப்போது சந்தோசமாக உள்ளார்கள்.

கடந்த 60 வருடங்களு;க்கு மேலாகவே தமிழ் மக்களைக் கொன்று வரும் சிங்களத் தீவிரவாதிகள் இப்போது மகிழ்ச்சியடைவார்கள்.

உலகின் குழம்பிய குட்டையில் சீனா மீன்பிடிக்கிறது. தனது கொலைகார ஆயுதங்களை இன்னொருவருக்கு வழங்கி அவரை பலமிக்க மனிதனாக்கியதன் மூலம் அது மீண்டும் ஒரு தடவை தனது இலக்கை அடைந்துள்ளது. அதனது கடற்டையால் பயன்படுத்துவதற்கென கட்டப்படும் துறைமுகம் உட்பட பல்வேறு கட்டுமானத்திட்டங்களை சீனா இலங்கையின் தெற்குப் பகுதியில் ஏற்கெனவே ஆரம்பித்துள்ளது.

இந்தியாவும் ஏற்கெனவே போடப்பட்ட எண்ணெய் ஆய்வுத் திட்டத்தை ஆரம்பித்;துள்ளதோடு இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் தனது பல்வேறு திட்டங்களை ஆரம்பிக்க தனது நிபுணர்களை அனுப்பி வைத்துள்ளது.

சீனாவும் பாகிஸ்தானும் தமது கொலைகார ஆயுதங்களை இலங்கைக்குக் கொடுத்து போரை எவ்வாறு கொண்டு செல்வது என்றும் போரை எவ்வாறு நடாத்துவது என்றும் இலங்கை அரசு;கு உதவியிருக்கிறார்கள்.

இந்தியாவின் போரை தான் இலங்கையில் நடாத்தியதாக இலங்கை ஜனாதிபதி அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்தப் போரில் இந்தியாவின் கைகளில் இரத்தக்கறை படிந்துள்ளது என்று இந்தியாவின் முன்னாள் உயர் ஸ்தானிகர் ஒருவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். எனினும் தமிழ் மக்களின் இக்கட்டான நிலை குறித்து இந்தியா கவலைப்படவில்லை.

இலங்கையின் போர் கிளர்;ச்சிக்குழுத் தலைவரை வைத்து எதுவும் செய்வதற்கல்ல. அவருடைய உடலுக்கு அப்பால் மிகப் பெரிய கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றிருக்கின்றன. இந்த வெற்றிப் பேச்சுக்கள் ஒன்றும் மடத்தனமானவை அல்ல. அவையெல்லாம் அந்தந்தத் தரப்புக்களால் மிக நிதானமாகச் சிந்தித்துச் செய்யப்பட்ட பேச்சுக்களே. கம்பளத்திற்குக் கீழ் ஒளிந்து கொண்டுள்ள எல்லா நச்சுப் பாம்புகளின் பேச்சுக்களே அவை.

இலங்கையின் போர்க்குற்றங்கள்:

சதாம் ஹுசைன் குர்த்ஷ் மக்களுக்கு இழைத்ததைவிட பலமடங்கான போர்க்குற்றங்களை இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு இழைத்துள்ளது.

வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த கிளர்ச்சிக்காரர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். காயமடைந்த பொதுமக்கள் கருணையற்ற முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

இலங்கைப் படையினரால் மட்டுமல்ல, இலங்கை இந்திய அரசியல்வாதிகளாலும், ஐநா அதிகாரிகளாலும் மிகக் கடுமையான போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளன.

அப்பாவிகளான ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் மீது தடை செய்யப்பட்ட கிளஸ்டர் மற்றும் பொஸ்பரஸ் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. சர்வதேச செஞ்சிலுவைச்சங்கப் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஒரே வைத்தியசாலை பலமுறை குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. கட்டிடங்களும் சொத்துக்களும் மிகப் பலம்வாய்ந்த குண்டுகளினால் தகர்க்கப்பட்டுள்ளன.

அப்பாவி மக்கள் பதுங்குகுழிகளில் மாதக்கணக்காக இருக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவும் மருந்தும் தடை செய்யப்பட்டிருக்கிறது.

இலங்கை இப்போதும் ஆதாரங்களை மறைத்துக் கொண்டிருக்கிறது:

ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதற்குப் புறம்பாக முப்பதாயிரம் பேர் காயமடைந்துள்ளனர். உண்மையான மனிதாபிமான அல்லது மீட்பு உதவிகள் எதுவும் கிடைக்கா வண்ணம் இன்னொரு மூன்று இலட்சம் பேர் இனவதை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கைக்குத் தெரியும் தான் மிகப் பெரிய போர்க்குற்றங்களை இழைத்துள்ளேன் என்று. அதனால் இப்போது அந்த அக்கிரமங்களை மூடி மறைக்கும் பணியில் அது இறங்கியிருக்கிறது.

போர்ப்பிராந்தியத்திலிருந்து வெளியேறிய மக்களே இந்தக் கொடுமையான போர்க்குற்றங்களின் சாட்சியாளர்களாவர். அவர்கள் தமக்கு என்ன நடந்தது என்றும் தமது அன்பிற்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதையும் கண்ணால் கண்டவர்கள். இலங்கை அரசாங்கம் ஊடகவியலாளர்களையும் மனிதநேயப் பணியாளர்களையும் சுதந்திரமாக இந்த முகாம்களுக்கு அனுமதிக்காததன் முக்கிய நோக்கமே இந்தச் சாட்சியங்களை வெளிவரவிடாமல் தடுப்பதும் அவற்றை எவ்வாறாயினும் அழித்து விடுவதனூடாக தனது போர்க்குற்றங்களை மூடி மறைப்பதும் தான்.

வன்னியில் காயமடைந்த மக்களின் உயிர்களைப் பாதுகாத்த அந்த மூன்று வைத்தியர்களுமே உண்மையான வீரர்கள் என சர்வதேச சமூகத்தால் கணிப்பிடப்படுகிறார்கள். அவர்களுடைய அந்த முயற்சியை ஊக்கப்படுத்துவதற்குப் பதிலாக இலங்கை அரசாங்கம் தனது போர்க்குற்றங்களுக்கான ஆதாரங்களை மறைப்பதற்காக அவர்களைச் சிறையில் தள்ளிப் பூட்டியுள்ளது.

இந்தப் போர் இரண்டு வாரங்களுக்கு முன்னரே முடிவடைந்து விட்டது. ஆனால் இதுவரை போர்ப்பிராந்தியங்களுக்கு ஊடகவியலாளர்களோ உதவிநிறுவனப் பணியாளர்களோ செல்ல அனுமதிக்கப்படவில்லை.

போர் முடிவடைந்த விட்டது என்றும் அங்குள்ள மக்கள் யாவரும் மீட்கப்பட்டு விட்டார்கள் என்றும் இலங்கை அரசாங்கம் அறிவித்திருக்கின்ற போதும், காயமடைந்து வீழ்ந்து கிடக்கின்ற பலர் இன்னமும் அங்கேயே கிடக்கிறார்கள். அதுமட்டுமின்றி வெளியே வர அஞ்சிய பலர் இன்னமும் பதுங்குகுழிகளுக்குள்ளேயே பதுங்கியிருக்கிறார்கள்.

புதைகுழிகள் இலங்கை அரசாங்கத்திற்கு பழைய வழிமுறைகளாகி விட்டன. போர்ப்பிராந்தியத்திற்கு இன்னமும் ஊடகவியலாளர்களோ அல்லது உதவி நிறுவனப் பணியாளர்களோ இலங்கை அரசால் அனுமதிக்கப்படவில்லை. இதற்கு மிக நீண்டகாலம் எடுக்கும். ஏனெனில் அங்கு இறந்துபட்டுக் கிடக்கும் ஆயிரக்கணக்கானவர்களின் இறந்த உடல்களை இராணுவத்தினர் அடையாளமின்றி அழித்துக் கொண்டிருக்கின்றனர்.

கிளர்ச்சித் தலைவரின் உடலைத் தகனஞ்செய்து சாம்பலை கடலில் எறிந்த விட்டதாகத் தெரிவிக்கும் இலங்கை ஆயுதப்படைகளின் தலைமையின் அண்மைய அறிவிப்பு இதேபோன்ற வழிமுறையையே அங்கு கொல்லப்பட்டுக் கிடக்கும் உடலங்களுக்கும் மேற்கொள்ளப்படும் என்பதைக் கோடி காட்டுகிறது. இலங்கைப் படைகள் அங்கு இடத்துக்கு இடம் எடுத்துச் சென்று உடல்களைத் தகனஞ் செய்யக்கூடிய உலைகளைப் பயன்படுத்தக் கூடும். இதன்மூலம் அவர்கள் எல்லாவகையான சாட்சியங்களையும் துடைத்தழித்து விடலாம்.

இது வெளிப்படையாகத் தெரிய வரக் கொஞ்சக் காலம் எடுக்கும். எவ்வளவு மக்கள் இந்தப் போரில் கொல்லப்பட்டார்கள் எனக்கணக்கெடுக்கும் போது இது தெரிய வரும்.
இவை எல்லாம் முடிந்த பிறகு நமது பிபிசி செய்தியாளர்கள் அப்பிரதேசத்திற்குச் சென்று எவ்வளவு அழகிய நீல வானமும் தங்க நிற மணலும் கொண்டது இந்தக் கடற்கரை என்று வர்ணனை செய்வார்கள்.

நன்றி
-உலக தமிழ்ச் செய்திகள்

0 comments: