Headline

இந்திய குடிவரவுத் துறையால் சிவாஜிலிங்கம் நாடு கடத்தப்பட்டார்


தமிழகத்தின் தஞ்சையில் நேற்று முதல் இரண்டு நாட்களுக்கு நடைபெறும் ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில் கலந்து கொள்ள விமானம் மூலம் திருச்சி சென்ற இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் இந்திய குடிவரவுத் துறையால் அனுமதி மறுக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டார்.

ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் சிவாஜிலிங்கம் நேற்று அதிகாலை 3.00 மணிக்கு விமானம் மூலம் திருச்சி சென்றடைந்தார். ஆனால் அவரை விமான நிலையத்திலிருந்து வெளியே செல்ல அனுமதி மறுத்த குடிவரவுத் துறை அதிகாரிகள், அவரை தடுத்து வைத்தனர்.

சிறிது நேரத்தில் திருச்சி விமான நிலையத்திலிருந்து துபாய் புறப்பட்ட விமானத்தில் ஏற்றி அனுப்பிவிட்டனர். அங்கிருந்து சிவாஜிலிங்கம் கொழும்பு வர வேண்டும். ஆனால் நேற்று இரவுவரை இவர் கொழும்பு வந்து சேரவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

என்ன காரணத்திற்காக சிவாஜிலிங்கத்தை நாட்டிற்குள் அனுமதிக்க மறுத்தனர் என்று குடி யேற்றத்துறை அவருக்குத் தெரிவிக்கவில்லை. ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவைப் பெறுவதில் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடும் சரத் பொன்சேகாவிற்கும், மகிந்த ராஜபக்சவிற்கும் கடும் போட்டி நிலவும் நிலையில், வெற்றி பெறுவதற்கு தமிழர்களின் வாக்குத் தேவை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தச் சூழலில் தனி வேட்பாளராக சிவாஜிலிங்கம் களமிறங்கியிருப்பது தேர்தலில் அளிக்கப்படும் தமிழர்களின் வாக்குகளை அவர் பெறும் வாய்ப்புள்ளதால் தங்கள் வெற்றி பாதிக்கப்படும் என்று அவர்கள் கருதுகின்றனர்.


நன்றி
- வீரகேசரி

0 comments: