Headline

மனித உரிமை விதிகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்: ஐரோப்பிய கூட்டமைப்பு



இலங்கை போர் தொடர்பாக ஐரோப்பிய கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டு உள்ளது.

அவ்வறிக்கையில்,’இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் உன்னிப்பாக கவனித்து வருகின்றது. அங்கு உருவாகியுள்ள மனித அவலங்கள் மற்றும் இடம் பெயர்ந்த மக்கள் கொல்லப்படுவது தொடர்பாக ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும், பொது மக்களின் இழப்புக்களை தவிர்ப்பதற்கு போரில் ஈடுபடும் இருதரப்பும் அனைத்துலக மனிதாபிமான விதிகளையும், போர் விதிகளையும் மதித்தல் வேண்டும். இலங்கை அரசும், விடுதலைப்புலிகளும் இதனை மதிக்க வேண்டும்.


வன்னியில் உடனடியாக போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு, மனிதாபிமான உதவிகள் அங்கு செல்வதற்கும், மக்கள் நடமாடுவதற்குமான சூழ்நிலைகள் உருவாக்கப்பட வேண்டும்.

விடுதலைப்புலிகள் மக்களை வெளியேற விடாது தடுப்பது கண்டனத்திற்கு உரியது.


வவுனியாவில் உள்ள இடைத்தங்கல் முகாமுக்கு வரும் மக்களின் மீது மேற்கொள்ளப்படும் சோதனைகள் அனைத்துலகத்தின் தராதரத்துடன் இருத்தல் வேண்டும் என்பதை இலங்கை அரசு உறுதிப்படுத்த வேண்டும். அங்கு சர்வதேச கண்காணிப்பாளர்கள் பணியாற்றுவதற்கும் அனுமதிக்க வேண்டும்.

இந்த முகாம்களுக்கு செல்லும் முழு அதிகாரங்களும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனிதாபிமான அமைப்புகள் போன்ற வற்றுக்கு வழங்கப்பட வேண்டும்.


இலங்கையில் நடைபெற்றுவரும் நீண்ட காலப்போருக்கு படைத்துறை ரீதியாக தீர்வு காண முடியாது. விடுதலைப் புலிகள் வன்முறைகளை கைவிட்டு ஆயுதங்களை கீழே போட வேண்டும்.


எல்லா சமூகங்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் தீர்வு ஒன்றை இலங்கை அரசு முன் வைக்க வேண்டும்.


இலங்கையில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்கள் மற்றும் வன்முறைகள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் கவலை கொண்டுள்ளது. மனித உரிமை மீறல்களுக்கு எதிராக அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். துணை ராணுவக் குழுவினரின் ஆயுதங்கள் களையப்படவேண்டும்.


அனைத்துலகத்தின் மனித உரிமை விதிகள் அங்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



நன்றி
-நக்கீரன்

0 comments: