Headline

கொழும்பில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கைது


*net photo
கொழும்பின் பல பகுதிகளில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து நடத்திய திடீர் சுற்றிவளைப்புத் தேடுதலில் தமிழர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, தெஹிவளை, கொச்சிக்கடை, மட்டக்குளி, முகத்துவாரம் உட்பட பல பகுதிகளிலேயே இந்த திடீர் சுற்றிவளைப்புத் தேடுதல் நடத்தப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த தேடுதல் சுற்றிவளைப்பின் போது ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பு தரப்பினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களில் தமது பதிவை உறுதிப்படுத்தத் தவறியவர்களே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சுற்றிவளைப்புத் தேடுதலின் போது கொழும்பின் பிரதான வீதிகளில் பயணித்துக்கொண்டிருந்த பஸ்கள் இடைமறித்து அவற்றில் பயணித்துக்கொண்டிருந்த பயணிகள் அனைவரும் இறக்கப்பட்டு பலத்த சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் பொதுமக்கள் பலர் பல சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். இதேவேளை முச்சக்கரவண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் உட்பட அனைத்து வாகனங்களும் இதன்போது சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

சோதனையின் போது கைது செய்யப்பட்டவர்கள் அந்தந்த பகுதிகளிலுள்ள பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டு தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். உரிய விசாரணைகளை அடுத்து அவர்களை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

நன்றி
-வீரகேசரி

1 comments:

Anonymous said...

புலிகளின் பயங்கரவாதம் ஒடுக்கப்படும் வரை இலங்கை தமிழர்கள் இப்படியான துன்பங்கள் அனுபவிக்க வேண்டியிருக்கும்