Headline

"எங்கள் முகாரிகள் முரசுகளாக மாறும்"




மௌனித்துக் கொண்டவர்களே!
இனிமேல் மனிதத்தைப்பற்றிப் பேசாதீர்கள்.
பேசினால் உங்கள் கருத்தைக் காவிவரும் மொழி களங்கப்பட்டுவிடும்.
எட்ட நின்று வேடிக்கை பார்த்துவிட்டுஇ
ஆதாயம் உண்டென்றால் இனவாத அரசின் செயலை ஆதரித்துஇ
இந்த இனஅழிப்பிற்கு,
“பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்று
முத்திரை குத்திவிட்டு முறுவலித்துக் கொள்ளுங்கள்.

இப்போது முகாரிகள் எங்கள் தேசியமொழியாகிக் கிடக்கிறது.
வலியனை வாழ்த்துவது வழமையானதுதான்…
நாங்கள்தான் முட்டாள்கள் போலும்.
எங்கள் ஒப்பாரிகள்….
உங்கள் செவிப்பறையில் மோத மானிடத் துடிப்புக் கொள்வீர்கள் என்று நம்பி,
ஏமாந்து கொண்டிருக்கிறோம்.
எங்கள் பிள்ளையர்தான் எங்கள் வல்லமைகள் என்பதை சில சமயங்களில்….
பிறழ்வுக்கு உள்ளாக்கிவிடும் தவறைச் செய்கிறோம்
தன்கையே தனக்குதவி எனும் இனம்
பிறன் காலடியில் உயிர்வாழ, கையேந்த சபிக்கப்பட்டது எப்படி?

காலங்காலமாக வாழ்ந்த மண்ணில்,
எத்தனை காலமாக ஏதிலிகளாகக்கப்பட்டு,
இனஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு சிறுகச் சிறுக சீரழிக்கப்பட்டோம்.
எவரேனும் எங்கள் வாழ்வைப்பற்றிக் கவலையுற்றுக் குரல் தந்தீர்களா?
இல்லையே…
உங்கள் நாட்டில் நீங்கள் இன்னொரு இனத்தால் ஒடுக்கப்படுகிறீர்கள் என்று
அறியவில்லை என்று எங்கள் காதுகளில் பூச்சுத்தாதீர்கள்;.
இப்போது நாளாந்தம் எம்மண்ணில்,
துடிக்கத் துடிக்க சாவணைக்கும் உறவுகளின் எண்ணிக்கையை,
ஏதோ உணவுப் பயிருக்கு தீங்கு செய்யும்
பூச்சி, புழுக்களைக் கொல்லும் கணக்கில் போட்டுவிட்டதுபோல்,
துளியும் மனவருத்தமின்றி மெத்தனமாக கதைக்கிறீர்களே தவிர,
அதிலும் கொஞ்சம் நிவாரணப்பணம் தந்துதவ நினைக்கிறீர்களே அன்றி,
நாளாந்தச் சாவுகளையும்,
கைகால் இழப்புகளையும்,
மனநலம் குன்றுவதையும்……
உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என்று
யாரும் அறைகூவல் செய்யாமல் மழுப்புகிறீர்கள்.
அப்படியாயின்,
எங்கள் தாயக மண்ணில் நடைபெறும் இனஅழிப்பு என்பதை
நீங்கள் எல்லோரும் மௌனத்தின் மூலம் அங்கீகரிக்கின்றீர்களா?

அனைத்துலகமே! போதும்..
உங்கள் மனித காருண்யத்தை நன்றாக உணர்ந்து கொண்டவர்கள்
ஈழத்தமிழர்களாகத்தான் இருக்கமுடியும்.
எங்களுக்கான தொப்புள் கொடி உறவுகள்தான்,
எமக்காக தம் வாழ்வைக் கருக்கி நாளாந்தம் தமை வருத்தி வாழ்கிறார்கள்.
அவர்களின் கூக்குரல் கூடவா எவருக்கும் கேட்கவில்லை.
உலகமெல்லாம் தாவரம், பறவை, விலங்கு என்று
எல்லாவற்றையும் பாதுக்காக்க திரளுங்கள்.
மனிதர்களை அதுவும் ஈழத்தமிழர்களை சீ விட்டுவிடுங்கள்.
எங்களுக்காகக் குரல் கொடுக்கவேண்டாம்.
சரி எங்களை அழிக்கச் சிங்கள அரசுக்கு போர் ஆயுதங்களையாவது வழங்காமல் விடலாம் அல்லவா.
ஐயோ..!! நாற்காலி மனிதர்களே!
நாறும் பிணமாகவும், நாயிலும் கேவலமான வாழ்வானதாகவும்
எங்கள் வாழ்வின்று நலிந்து கிடக்கிறது.
எங்கள் வலிகள் உங்களுக்குப் புரியப் போவதில்லை.
நீங்கள் எவரும் புரிய முயற்சிக்கப்போவதும் இல்லை.
தலையிடியும் காய்ச்சலும் தனக்குத் தனக்னெ;றால் தெரியும் அதன் வேதனை.

உலகே!
ஒரு கண்ணில் வெண்ணையும், மறுகண்ணில் சுண்ணாம்பும் தடவிக் கொண்டிருக்கும்
உன் போக்கு மாறும் காலம் வரும்.
எங்கள் முகாரிகள் முரசுகளாக மாறும்.
எங்கள் வலிகள் வல்லமைகளாக உருவெடுக்கும்.
வேண்டாப் பொருளாக விலக்கப்பட்ட நாங்களே
விலைமதிப்பில்லாத விடுதலைக்குச் சொந்தக்காரர்களாக மாறுவோம்.
சர்வதேசம் கண்ணிழந்த கதையை, ஈழப்புத்தகம் வரலாறாய் வரைந்து கொள்ளும்.
இன்று உலகெங்குமாக வாழும் தமிழ் உறவுகளின்
கண்களில் வழியும் கண்ணீரே தாயகம் மீட்கும் மறவர்களின் காப்பரன் என்று
காலம் உணர்த்தும் பாடத்தை இனிவரும் போராட்டங்கள்
முன்னுதாரணம் ஆக்கிக் கொள்ளும்.
யாரெல்லாம் எங்கள் இனத்தின் வாழ்விற்கு விசமிடுகிறீர்களோ…
வெகுவிரைவில் வெட்கித்துக் கொள்வீர்கள்.

வல்லை சகாரா

நன்றி: வன்னித்தென்றல்

0 comments: